மேட்டுப்பாளையம் அருகே, நெல்லித்துறை பகுதியில், பவானி ஆற்றில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவர்களை பரிசல்காரர்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
கோவை, குமரகுரு பொறியியல் கல்லூரியில் ஒசூரை சேர்ந்த சாகர்அலி (21), பெரம்பலூரைச் சேர்ந்த ராஜா (21), மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) ஆகிய 3 பேரும் இறுதியாண்டு படித்து வருகின்றனர். இவர்களது நண்பர் சிவா ( 22). இவர், மேட்டுப்பாளையம், இடையர்பாளையத்தில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கல்லூரி முடிந்ததும் சாகர்அலி, ராஜா, கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர்.
மேட்டுப்பாளையத்துக்கு வந்த அவர்கள், சிவாவையும் அழைத்துக் கொண்டு நெல்லித் துறையை அடுத்துள்ள விளாமரத்தூர் பகுதிக்கு வந்தனர்.
பின்னர், குண்டுக்கல் துறை பவானிஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த அவர்களால் உடனடியாகக் கரைக்கு வர முடியவில்லை.
இதையடுத்து, வெள்ளத்தின் போக்கில் சென்ற அவர்கள் ஆற்றின் மறுகரையை அடைந்தனர். பின்னர் அவர்களது அலறல் சப்தத்தைக் கேட்டு ஆற்றின் மறுகரையில் இருந்த ஹரீஸ் என்பவர் மேட்டுப்பாளையம் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது, ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துக் காணப்பட்டதால் உடனடியாக பரிசல்காரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அப்போது இருள் சூழத் தொடங்கியதையடுத்து, பரிசல்காரர்களின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவர்கள் 4 பேரையும் இரவு 9 மணியளவில் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர்களுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.