மொடக்குறிச்சியில் கருகும் தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை
மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மொடக்குறிச்சி எழுமாத்தூர், குலவிளக்கு, மின்னப்பாளையம், அய்யகவுண்டன்பாளையம், கோவில்பாளையம், ஈஞ்சம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் மழை இல்லாததால் கடும் குடிநீர்த் தட்டுபாடு நிலவி வருகிறது. பெரும்பாலான விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட்டன. தென்னை மரங்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளன. கடைசி முயற்சியாக விவசாயிகள் டிராக்டரில் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.
இதுகுறித்து, அய்யகவுண்டன்பாளையம் விவசாயி நல்லகுமாரசாமி கூறியதாவது:
கடந்த சில மாதங்களாகவே கடும் வறட்சி நிலவுகிறது. ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. ஆனால் மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை முற்றிலும் பொய்த்துவிட்டது. மழை பொய்த்தாலும் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர்த் திறந்து விடுவார்கள். அதனால் தென்னை மரங்களை அழியாமல் காத்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், போதிய மழை இல்லை எனக் காரணம் காட்டி கீழ்பவானி பாசனத்துக்கும் தண்ணீர்த் திறக்காததால், தற்போது குடிப்பதற்கே தண்ணீரின்றி சிரமப்படுகிறோம். பல ஆண்டுகளாக காத்து வந்த தென்னை மரங்களை இழக்க மனமில்லாமல் தற்போது, ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ. 700-க்கு வாங்கி மரங்களுக்கு ஊற்றி வருகிறோம்.
மழை பெய்துவிட்டால் அருகிலுள்ள குரங்கன்ஓடையில் தண்ணீர்வந்து விடும். அல்லது கீழ்பவானி வாய்க்காலில் குடிநீருக்காக 15 நாள்கள் தண்ணீர்த் திறந்துவிட்டால் ஆயிரக்கணக்கான தென்னைகள் காப்பாற்றப்படும். தமிழக அரசு அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைக் காப்பாற்ற முடியும் என்றார்.