சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் சுஜ்ஜல்குட்டை கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி அக்கிராம மக்கள் ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த சுஜ்ஜல்குட்டை வனக் கிராமத்தில் வளர்ந்துள்ள ஏராளமான சீமைக் கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
கிராமத்தையொட்டி உள்ள பெரிய மரங்களை அகற்றுவதில் மட்டுமே பொதுப் பணித் துறையினர் ஆர்வம் காட்டுவதாகவும், சிறிய முள் செடிகளை அப்படியேவிட்டுச் செல்வதாகவும் புகார் தெரிவித்தனர். ஆனால், சிறிய செடிகள் அகற்றாமல் அப்படியே விடுவதால் அவை மீண்டும் வளர்ந்து நீராதாரத்தை பாதிக்கும் என்பதால் அவற்றை முழுமையாக அகற்றக் கோரி ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொதுப் பணித் துறை அலுவலர்கள் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். கிராமத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.