எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் தொடக்கிவைத்தனர். வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் சத்தி சாலை வழியாக, மாமரத்துப்பாளையம் வரையிலும், மாணவர்கள் சித்தோடு, நால்ரோடு வரையிலும் சென்றடைந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் முதல் பரிசை பெற்றவர்களுக்கு செப்டம்பர் 6-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசுகளை வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் பங்கேற்றனர்.