ஈரோடு புத்தகத் திருவிழாவில் உள்ளூர் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஈரோடு மாவட்ட படைப்பாளர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகத் திருவிழாவில் மொத்தம் 240 அரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய, மாநில புகழ்பெற்ற தமிழ், ஆங்கில பதிப்பகங்கள் இங்கு தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. இந்நிலையில், உள்ளூர் படைப்பாளிகளின் புத்தகங்களை மட்டுமே வைக்கும் வகையில் ஈரோடு மாவட்ட படைப்பாளர் அரங்கு (எண்-16) மக்கள் சிந்தனைப் பேரவையின் நேரடிப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு இம்மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த மிகச்சிறந்த படைப்பாளிகளான மு.ச.சிவம், பாவலர் க.மா.சண்முகசுந்தரம், எழுத்தாளர் இரா.வடிவேலன், கவிஞர்கள் பெ.தூரன், சி.முத்துசாமி, சீனி தேவராசன், மழைமகன், எழுத்தாளர் மே.செ.இராசமாணிக்கம் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், கல்வெட்டு ஆய்வாளர் புலவர் செ.இராசு, மருத்துவர் வெ.ஜீவானந்தம், த.ஸ்டாலின் குணசேகரன், வா.மு.கோமு, கணியன் பாலன், ப.கமலக்கண்ணன் உள்ளிட்டோரின் நூல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த அரங்கில் 50-க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் 500-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள படைப்பாளிகள் தங்களது புத்தகத்தை இந்த அரங்கில் வைத்துப் பயன்பெறலாம் என இந்த அரங்கின் பொறுப்பாளர்கள் எஸ்.சண்முகம், வில்லவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.