பவானியில் புதன்கிழமை அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் செல்வதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பவானி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதன்கிழமை மாலை ஈரோடுக்கு அடுத்தடுத்து அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன. அந்தியூர் பிரிவு அருகே சென்றபோது அரசுப் பேருந்தை, தனியார் பேருந்து முந்திச் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இருவரும் தனியார் பேருந்து ஓட்டுநரிடம் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இதைக் கண்டு கொள்ளாமல் தனியார் பேருந்தில் அவர்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இதனால், இருதரப்பினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, வாகனங்கள் வரிசையாக நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த போலீஸார் வந்ததால், முன்னால் நின்ற தனியார் பேருந்து உடனடியாகப் புறப்பட்டது.
ஆனால், அரசுப் பேருந்து ஓட்டுநர் பழனிச்சாமி, அரசுப் பேருந்து செல்லும் நேரத்தில் தனியார் பேருந்து செல்லக் கூடாது எனக் கூறி, பேருந்தின் முன்பாக திடீரெனப் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. உடனே போலீஸார் தலையிட்டு ஓட்டுநரை சமாதானப்படுத்தியதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.