தமிழக வனத் துறையில் முதன்முதலாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 4 பெண் வனவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வனக் குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண் குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், வனத்தைப் பற்றிய பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகத்தில் 36 பெண் வனவர்கள் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பிரதீபா தலமலை வனச் சரகத்திலும், சூரியா டி.என்.பாளையம் வனச் சரகத்திலும், சண்முகவடிவு ஆசனூர் வனச் சரகத்திலும், கனிமொழி சத்தியமங்கலம் வனச் சரகத்திலும் வனவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட முதன்மை வனப் பாதுகாவலர் அன்வர்தீன், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கள இணை இயக்குநர் அருண்லால் ஆகியோர் முன்னிலையில் புதிய பெண் வனவர்கள் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றனர். தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் சிறப்பாகச் செல்படுவதைப் போல, வனத் துறையிலும் பெண் வனவர்கள் சிறந்து விளங்குவர் என தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் தெரிவித்தார்.