புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி: ரூ. 15.40 லட்சம் நிதி உதவி
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில், கொங்கு பொறியியல் கல்லூரி தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மைய (டி.பி.ஐ.) கண்டுபிடிப்பாளர்கள் இருவருக்கு ரூ. 15.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த கண்டுபிடிப்பாளர்களிடம் அவர்களுக்கு உரிய தொகைக்கான வரைவோலையை கொங்கு பொறியியல் கல்லூரி தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையத் தலைவர் பி.சத்தியமூர்த்தி வழங்கினார்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின்கீழ் கொங்கு பொறியியல் கல்லூரி தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையத்துக்கு மொத்தம் ரூ. 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுபோல 10 தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையங்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கண்டுபிடிப்பாளருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதி உதவி செய்ய முடியும். தொடர்ந்து 5 ஆண்டுகள் இத்திட்டம் அமலில் இருக்கும்.
இதுவரை 29 கண்டுபிடிப்புகளுக்கு மொத்தம் ரூ. 3.38 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் சி.கார்த்திகேயன், சுராஜ் ஆகியோருக்கு தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையத் தலைவர் சத்தியமூர்த்தி ரூ. 15.40 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் ஏ.வெங்கடாசலம், கல்லூரி முதல்வர் எஸ்.குப்புசாமி, தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மைய மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.