பவானியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பவானியில் அந்தியூர் பிரிவு, மேட்டூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி லட்சுமிபிரியா (32). நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவருக்கு கடந்த இரு நாள்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், லட்சுமிபிரியாவின் உடல்நிலை மோசமானதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, லட்சுமிபிரியா உயிரிழந்தார். குழந்தை பிறந்த இரு நாள்களில் தாய் காய்ச்சலால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு தொடரும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதனால்,
மர்மக் காய்ச்சல் பாதிப்பை போக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.