அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெயரைச் சொல்லி, குளங்களில் கிராவல் மண்ணை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகருக்கு, பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் எழுதியுள்ள கடித விவரம்:
பெருந்துறை வட்டத்தில், ஆளுங்கட்சியினர் கிராவல் மண்ணைக் கொள்ளையடிப்பதாக ஒரு நாளிதழில் அண்மையில் செய்தி வெளியாகி இருந்தது. பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எனக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக இச்செய்தி இல்லை.
தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைக்கும் நபர்கள், ஆட்சியாளர்கள் பெயரைச் சொல்லி, ஒரு சில அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கனிம வளங்களை கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. அல்லது பத்திரிகையில் வெளியானது பொய்ச் செய்தியாக இருக்க வேண்டும். எனவே, எங்கு தவறு நடைபெறுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர் கண்டறிந்து இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்கள் யார், கண்காணிக்கத் தவறிய அல்லது துணை நின்ற அதிகாரிகள் யார் என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில் தவறுகள் ஏதும் நடைபெற்றிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.