சிவகிரியில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க வீடு, வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிவகிரியில் உள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக கல்லூரி மாணவ, மாணவிகள் டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவர் மேகநாதன் தலைமையில் வகித்தார்.
குழுவுக்கு 4 மாணவர்கள் வீதம் , 268 மாணவர்களைக் கொண்ட 67 குழுக்கள் அமைக்கப்பட்டு, சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட வீடுகளுக்குச் சென்று டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரங்களை விநியோகித்து, டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 20 கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த விழிப்புணர்வுப் பணியில், கல்லூரி முதல்வர் வடிவேல், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் புகழேந்தி, சிவகிரி அரசு மருத்துவமணை சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.