பவானி, அம்மாபேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக பவானி சுற்று வட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசத் தொடங்கியது.
இதனால், அம்மாபேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. நெரிஞ்சிப்பேட்டை காலனியில் தேவி என்பவரின் குடிசை வீடு அடியோடு சாய்ந்தது. புதுசாலை பகுதியில் இரு வீடுகளின் மேற்கூரைகள் உடைந்து விழுந்தன.
பவானி - மேட்டூர் சாலையில், நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்து விழுந்தன. பவானி பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோன்று வியாழக்கிழமை இரவும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அடுத்தடுத்து இரு நாள்கள் இரவு நேரங்களில் பெய்யும் மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.