ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்ததும் மே 12-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுவதால் அவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அனைத்துப் பள்ளிகளிலும் விநியோகம் செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.
பள்ளிகளில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக சான்றிதழில் பள்ளியின் சீல், தலைமை ஆசிரியரின் கையொப்பம் இடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.