ரூ. 35 லட்சத்தில் தூர்வாரப்படும் கூகலூர் குளம்
ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூரில் உள்ள குளம் ரூ. 35 லட்சத்தில் தூர்வாரப்பட்டு வருகிறது.
ஒளிரும் ஈரோடு அறக்கட்டளை சார்பில் இக்குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை இந்த அறக்கட்டளை தூர்வாரி வருகிறது.
இதுவரை சுமார் 100 ஏக்கர் அளவுக்கு 18 குளம், குட்டை, தடுப்பணைகள், ஓடை போன்ற நீர்நிலைகளில் தூர்வாரும் பணி பொதுமக்களின் ஆதரவுடன் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோபி வட்டம் கூகலூர் நகராட்சிக்கு உள்பட்ட 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட கூகலூர் குளத்தில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடக்க நிகழ்ச்சிக்கு ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் எம்.சின்னசாமி தலைமை வகித்தார். அறங்காவலர்களான கே.தங்கவேலு, எஸ்.செங்குட்டுவன், டி.சதீஷ்குமார், வி.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
50-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பொதுமக்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தூர்வாரும் திட்டத்தின் மூலமாக ஏரியின் அகலம், ஆழம் உயர்ந்து நீர்பிடிப்புப் பகுதியின் அளவு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.