கொடுமுடி அருகே வடக்குப்புதுப்பாளையம், அறச்சலூர் - கரூர் சாலையில் வேன் மோதியதில் முதியவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கொடுமுடி அருகே வடக்கு மூர்த்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்டியண்ணன் (70), விவசாயத் தொழிலாளி. இவர், தனது வீட்டில் இருந்து தாமரைப்பாளையம் செல்வதற்காக ஒத்தக்கடை வழியாக தண்ணீர்பந்தல் அருகே புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயர் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கண்டியண்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, கொடுமுடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.