ஈரோடு மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி, மெட்ரிக், மழலையர், தொடக்கப் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்புகளில் (எல்கேஜி, முதல் வகுப்பு), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குதல் திட்டத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது இணையதள வழியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை மையங்களில் இணையதளத்தில் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், இவ்வகைச் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான காலவரையறை மே 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்களை, ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், கோபி மாவட்டக் கல்வி அலுவலகம், ஈரோடு உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம்.
அதேபோல, ஈரோடு, பவானி, கொடுமுடி, பவானிசாகர், பெருந்துறை, கோபி, சென்னிமலை, சத்தி, மொடக்குறிச்சி, நம்பியூர், அந்தியூர், டி.என்.பாளையம், அம்மாபேட்டை, தாளவாடி ஆகிய 14 ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்கள் ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம்.
இந்த வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்தி குழந்தைகளை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் அல்லது நலிவடைந்த பிரிவினர் ஏதேனும் ஒரு பிரிவில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.