மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு நெல் வயல் வரப்பில் பயறு சாகுபடி குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள தொட்டிபாளையத்தில் வேளாண்மைத் துறை சார்பில், கோபி குமரகுரு வேளாண்மை கல்லூரி, ஆப்பக்கூடல் ஜே.கே.கே. கல்லூரி மாணவிகளுக்கு, நெல் வயல் வரப்பில் பயறு சாகுபடி குறித்த செயல்விளக்க விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, மொடக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் க.ஜெயராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:
நெல் வயல் வரப்பில் பயறு வகை சாகுபடி செய்வதன் மூலம் வரப்பில் களை கட்டுப்படுத்தப்படுகிறது. கவர் முடிச்சுகளில் நைட்ரஜனை நிலை நிறுத்துவதன் மூலம் மண் வளம் அதிகரிக்கப்படுகிறது. பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. பயறு வகை மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. கூடுதல் வருமானமும் கிடைக்கிறது என்றார்.
தொடர்ந்து, கோபி குமரகுரு வேளாண்மைக் கல்லூரி, ஆப்பக்கூடல் ஜே.கே.கே. கல்லூரி மாணவிகள் நெல் வயல் வரப்பில் பயறு வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். இதில், வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோமதி, துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.