தேசிய அளவிலான தடகளப் போட்டியில் ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த கொங்கு கலைக் கல்லூரி வீராங்கனைகள் இருவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
அகில இந்திய தடகள சம்மேளனம் சார்பில் 33-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டி ஆந்திர மாநிலம், குண்டூரில் நவம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், சுமார் 1,200 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில், கொங்கு கலை அறிவியல் கல்லூரி வீராங்கனைகள், தமிழ்நாடு தடகள சம்மேளனம் சார்பில் பங்கேற்றனர்.
இதில், 100 மீ தடை தாண்டும் ஓட்டம், 400 மீ தொடர் ஓட்டம் ஆகியவற்றில் இக்கல்லூரி வீராங்கனை ஆர்.நித்யா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதேபோல மற்றொரு வீராங்கனை ஆர்.வித்யா 200 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் என்.ராமன், உடற்கல்வித் துறை இயக்குநர் சங்கர், துணை உடற்கல்வி இயக்குநர் வனிதா, தடகளப் பயிற்சியாளர் பிரதாப் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.