தீபாவளியை முன்னிட்டு தீயணைப்புத் துறை சார்பில் தீத்தடுப்புப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு, தீயணைப்பு-மீட்பு பணித் துறை சார்பில் ஈரோடு காந்திஜி சாலையில் தீத்தடுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி சரவணன் இதனைத் தொடக்கிவைத்தார்.
சிஎஸ்ஐ பள்ளி என்சிசி மாணவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் பங்கேற்று, பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். வாளியில் தண்ணீர், மற்றொரு வாளியில் மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளவேண்டும்.
நீண்ட ஊதுவத்தியை உபயோகித்து, பக்கவாட்டில் நின்று பட்டாசுகளைக் கொளுத்தவேண்டும். எரிந்து முடிந்த பட்டாசு, மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீருள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ அணைக்க வேண்டும்.
வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது நைலான், சில்க் துணிகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். பட்டாசுக் கடைகள், வைக்கோல் போர், மின்னூட்டி, எரிவாயு கிடங்கு, மருத்துவமனைகள், சந்தை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது. குடிசைப் பகுதிகள், மரங்கள் நிறைந்த பகுதிகளில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.