பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற நண்பர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், நெத்திமேடு ஆண்டிக்கவுண்டர் காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் புஷ்பராஜ் (33). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். சேலம் மருத்துவக் கல்லூரி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பாலகுமார் மகன் டான் பிரவீண் (32). இவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் கணினி பிரிவில் பணியாற்றினார். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில், ஈரோட்டுக்கு புதன்கிழமை வந்த புஷ்பராஜ், பிரவீணுடன் சேர்ந்து பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் சென்று வாய்க்காலுக்குத் தண்ணீர் திறக்கப்படும் மதகின் உள்பகுதியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியதோடு, வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களின் இருசக்கர வாகனம், உடமைகள் கரைமீது இருப்பதைக் கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீஸாருக்கும், பவானி தீயணைப்பு நிலையத்துக்கும் புதன்கிழமை மாலை தகவல் தெரிவித்தனர். இரவு நேரமானதால் தேடும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மயானம் அருகே வாய்க்காலில் புஷ்பராஜின் சடலம் மீட்கப்பட்டது. வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, சுண்ணாம்பு ஓடை வரையில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு டான் பிரவீண் சடலத்தைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அணையின் மதகுக்கு அருகிலேயே இவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரின் சடலத்தையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.