பவானி நகராட்சிக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களை மறு அளவீடு செய்து புதிய வரிகள், அபராதத்துடன் வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
27 வார்டுகளைக் கொண்ட பவானி நகராட்சியில் 12,514 வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்ந்து வரி செலுத்தி வருகின்றனர். தற்போது நகராட்சி நிர்வாகத்தின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் வரியினங்களை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களை மறு அளவீடு செய்து கட்டுமானத்தின் பரப்புக்கேற்ப புதிய வரிகள் விதிக்கப்பட உள்ளது. இதற்கென, பவானி நகராட்சியில் நான்கு பேர் கொண்ட 4 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 27 வார்டுகளில் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்களின் கட்டுமானப் பரப்பளவு அளவிடப்பட்டு வருகிறது. இதில், பலர் ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களில் விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டிருந்தாலும் பழைய வரி விதிப்பை தொடர்ந்து வந்தது தெரியவந்தது.
இவ்வாறான விரிவாக்கம் செய்யப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரி விதிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வரி விதிப்பின்கீழ் வராமலிருந்த 369 கட்டுமானங்களுக்கும் புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளின்கீழ் இவ்வரி விதிப்பு முறை கணக்கிடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடங்களுக்கு 13 அரையாண்டுகளுக்கான வரி (ஆறரை ஆண்டுகள்) அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
புதிய கட்டுமானங்கள் கட்டப்பட்டிருந்தும் உரிய வரி கட்டாமலிருக்கும் அனைத்து கட்டுமானங்களையும் வரி விதிப்பின்கீழ் கொண்டு வருவதன் மூலம் கூடுதலாக வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவீட்டுப் பணிகள் நிறைவுபெற்ற நிலையில் சுமார் 900-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பகுதிகளிலும் விதிமீறல் கட்டுமானங்கள், கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கூடுதலாக வரி விதிக்கப்பட்டால் ஆண்டுக்கு சுமார் ரூ. 15 லட்சத்துக்கும் மேலாக நகராட்சியின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.