ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து செவிலியரின் கழுத்தை அறுத்து நகைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு தீயணைப்பு நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி (30). இவர், பெரியார் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவர், வெள்ளிக்கிழமை பணியில் இருந்தபோது கையில் ரத்தக் கறையுடன் வந்த இளைஞர் நோயாளிபோல நடித்துள்ளார்.
அப்போது, அந்த இளைஞருக்கு செவிலியர் திலகவதி வைத்தியம் செய்தார். திடீரென அந்த இளைஞர் தனது கையில் இருந்த பிளேடால், திலகவதியின் கழுத்தை அறுத்துவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை அந்த இளைஞர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பின் தொடர்ந்து வளைத்துப் பிடித்து ஈரோடு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் ஈரோட்டில் உள்ள செல்லிடப்பேசி கடையில் ஊழியராகப் பணியாற்றி வரும் தீபக்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.