ஆசனூர் வனப் பகுதியில் புலி நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம், புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கழுதைப் புலி, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புதுவடவள்ளியிலிருந்து இருமாநில எல்லையான காரப்பள்ளம் வரை சாலையின் இருபுறமும் உள்ள அடர்ந்த வனப் பகுதியிலிருந்து வனவிலங்குகள் அவ்வப்போது குடிநீர், தீவனம் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
தற்போது மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி ஆசனூர் வனப் பகுதியில் காரப்பள்ளம் முதல் புளிஞ்சூர் வரை சாலையோரத்தில் புற்கள் பசுமையாக வளர்ந்துள்ளதால் காலை, மாலை வேளைகளில் புற்களைத் தின்பதற்கு மான்கள் கூட்டம் கூட்டமாக வரும்.
இந்நிலையில், மான்கள் கூட்டமாக வரும் என்பதால் அவற்றை வேட்டையாடுவதற்காக புலி ஒன்று அப்பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லிடப்பேசியில் படம் பிடித்துள்ளனர். புலிகள் யானைகளைப்போல அல்லாமல் ஆபத்து என்று உணர்ந்தாலே மனிதர்களைத் தாக்கிவிடும்.
எனவே, புலி போன்ற வன விலங்குகளைக் கண்டால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.