பவானி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: நிவாரண முகாம்களில் 7,832 பேர் தஞ்சம்

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் நீடித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 7,832 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளில் நீடித்து வரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 7,832 பேர் 67 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் நீர்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 100.56 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 47,168 கன அடி நீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் 37,700 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக 2,300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 29.1 டிஎம்சி.
பவானிசாகர் அணையிலிருந்து 37 ஆயிரம் கன அடி நீரும், மேட்டூர் அணையிலிருந்து 1. 75 லட்சம் கன அடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், பவானி கூடுதுறையில் இவ்விரு ஆறுகளும் இணைவதன் காரணமாகவும் கொடுமுடி வரை 2 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இதனால், ஈரோடு, பவானி சோமசுந்தரபுரம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பவானிசாகர் அணை நீரையும் சேர்த்து ஆற்றில் 2.2 லட்சம் கன அடி நீர் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. 
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு மொடக்குறிச்சி முதல் கொடுமுடி வரை, பவானி பகுதி, சத்தியமங்கலம் பகுதி என 3 பிரிவுகளாகப் பிரிந்து காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள பவானி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 17 முகாம்களில் 2,067 பேரும், சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 29 முகாம்களில் 4,344 பேரும், கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள 8 முகாம்களில் 692 பேரும், அந்தியூர் பகுதியில் உள்ள 5 முகாம்களில் 156 பேரும், கொடுமுடி பகுதியில் உள்ள 5 முகாம்களில் 407 பேரும், ஈரோடு பகுதியில் உள்ள 2 முகாம்களில் 126 பேரும், மொடக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு முகாமில் 40 பேர் உள்பட மொத்தம் 67 முகாம்களில் 7,832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்முகாம்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளைக் கண்காணிக்கவும், மேலும் தேவையான முகாம்களை அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் உதவி இயக்குநர் நிலையில் உள்ள அலுவலரின் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இதுகுறித்து, ஆட்சியர் எஸ்.பிரபாகர் கூறியதாவது: 
பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணையின் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com