ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவுப் பணியாளர்கள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஈரோட்டில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.சண்முகம் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவுப் பணியாளர்கள் (ஆர்சிஹெச் பணியாளர்) சங்க ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 மணி நேரம் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1,500 மட்டுமே கடந்த 8 ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அரசாணையின் படி (385-1.1.2010) சிறப்பு கால முறை ஊதியம் வழங்கலாம் என அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை அந்த அரசாணைப்படி ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, முதல்வர், துறை அமைச்சர், செயலர், உயர் அதிகாரிகளிடம் கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசாணைப்படி சிறப்பு காலமுறை ஊதியம், 7-ஆவது ஊதியக்குழு சிபாரிசு செய்துள்ள ஊதிய உயர்வையும் வழங்க வலியுறுத்தி ஈரோடு, திண்டலில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் 12.3.2018 -அன்று முதல் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
இதில், அச்சங்கத்தைச் சேர்ந்த தருமபுரி பார்வதி, கடைமடைகோகிலா, திங்களூர் மலர், சரஸ்வதி, ஆலம்பாளையம் சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.