அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியர் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, ஈரோட்டில் அரசு மருத்துவமனை செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா (25) என்பவர் பிப்ரவரி 10-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு, மருத்துவர்கள் 2 பேர் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவ்விரு மருத்துவர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வெறும் கண் துடைப்பு எனவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சகிலா தலைமை வகித்தார்.
இதில், மாவட்ட நிர்வாகிகள் வேதமணி, தீபா, சிந்து, மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தி உள்பட நூற்றுக்கணக்கான செவிலியர் பங்கேற்று செவிலியர் மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியருக்குப் பணியிட பாதுகாப்பு வழங்க வேண்டும் என முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.