பவானி நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 45 கிலோ புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி நகரப் பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மளிகை மற்றும் பெட்டிக் கடைகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் என்.சதீஷ்குமார், எம்.சக்திவேல், மணி, கோடீஸ்வரன், எழில் ஆகியோர் கொண்ட குழுவினர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 45 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பவானி நகராட்சி குப்பைக் கிடங்கில் வைத்து அழித்தனர்.
இப்பொருள்களின் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.