ஈரோடு கறவை மாட்டுச் சந்தையில் 95 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோட்டில்  வியாழக்கிழமை நடைபெற்ற கறவை மாட்டுச் சந்தைக்கு அதிக எண்ணிக்கையிலான வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகள்

ஈரோட்டில்  வியாழக்கிழமை நடைபெற்ற கறவை மாட்டுச் சந்தைக்கு அதிக எண்ணிக்கையிலான வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகள் வருகையின் காரணமாக பசு, எருமை கறவை மாடுகள், கன்றுக் குட்டிகள் 95 சதவீதம்  விற்பனை ஆகியுள்ளன.
ஈரோடு, கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச் சாவடிஅருகே வாரந்தோறும் புதன் , வியாழன் ஆகிய இரு நாள்களில்  மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை அடி மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்பு கன்றுக் குட்டிகளும்  விற்பனை செய்யப்படுகின்றன.  இச் சந்தைக்கு, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு  மாவட்டங்களில் இருந்தும்  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.  இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் மாடுகள் தரமானதாக இருக்கும் என்ற காரணத்தால்  இச்சந்தையில் கறவை மாடுகளைக் கொள்முதல் செய்வதற்காக கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில்,  வியாழக்கிழமை நடைபெற்ற  சந்தைக்கு அனைத்து மாநில வியாபாரிகளும் வந்தனர். இதனால், மாடுகள் வரத்து கடந்த வாரத்தை விட  அதிகரித்துக் காணப்பட்டது.
இதுகுறித்து மாட்டுச் சந்தை மேலாளர் ஆர். முருகன் கூறியதாவது:
கடும் பனிப்பொழிவு காரணமாக அக்டோபர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சராசரிக்கும் குறைவாகவே சந்தை நிலவரம் இருந்தது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் முதல் பிற மாநில வியாபாரிகள், விவசாயிகளின் வருகை அதிகரித்திருந்தது. இந்நிலை ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்த மாதங்களில்தான் பசு மாடுகள் சினைப் பிடிக்க ஏற்ற  காலம் என மாடு வளர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
 இந்த வாரம் 95 சதவீத மாடுகள் விற்பனை ஆகியுள்ளன.  இந்த வாரச்  சந்தையில் 375 பசு மாடுகள், 300 எருமைகள், 150  வளர்ப்புக் கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில்,  பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.34ஆயிரம் வரையிலும், வளர்ப்புக் கன்றுகள் ரூ. 1000  முதல் ரூ.10ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளன. சந்தையில் அனைத்து வியாபாரிகளும், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் அதிக அளவில் திரண்டு வந்து மாடுகளை வாங்கிச்சென்றதால் களை கட்டியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com