காவல்துறையில் பணியாற்றுவோருக்கு மனஅழுத்தம் இல்லாமல் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வுக் கருத்தரங்கம் கோபியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்கில் மாவட்ட மனநல மருத்துவர் கவிதா தலைமையிலான குழுவினர் பயிற்சி வகுப்பை நடத்தினர். அப்போது மருத்துவர் கவிதா பேசியதாவது: காவல்துறையில் பணியாற்றுபவர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டியுள்ளது. குறிப்பாக, பெண்கள் வீட்டையும் கவனிக்க வேண்டும். பணியாற்றும் இடத்திலும் சரியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் முதலில் ஓய்வு மற்றும் உறக்கம் அவசியம். எனவே ஓய்வு கிடைக்கும்போது தூங்க வேண்டும். கோபம், மனஅழுத்தம் ஆகியவை மூளையில் சுரக்கும் வேதிப்பொருளின் மாற்றத்தால் ஏற்படுகிறது. போலீஸார் பொதுமக்களிடம் பேசும் விதம், பழகும் விதம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். பெரும்பாலான தற்கொலை முயற்சிக்கு மனஅழுத்தம் அல்லது குடிப் பழக்கம் காரணமாக அமைந்து விடுகிறது. இதற்கு எளிய பயிற்சி முறைகளை குறைந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றார்.
காவல்துறை ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் உள்பட கோபி உள்கோட்டத்தில் பணியாற்றி வரும் ஆண், பெண் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.