சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, தாற்காலிக கடைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துவதற்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2.51 லட்சத்துக்கு ஏலம் போனது.
சென்னிமலையில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. தேர்த் திருவிழா ஜனவரி 23 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, சென்னிமலை பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது.
இதில், தாற்காலிகக் கடைகள் அமைத்து கொள்வதற்காக சுங்கம் வசூல் செய்யும் உரிமம், ஒரு லட்சத்து 2,900 ரூபாய்க்கும், சென்னிமலை வாரச் சந்தை வளாகத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏலம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், திருவிழா காலங்களில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து கொள்வதற்கு ரூ. 22 ஆயிரத்துக்கும் என மொத்தம் இரண்டு லட்சத்து 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது.