கடந்த 3 மாதங்களில் பட்டுநூல் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளதைக் கண்டித்தும் பட்டுநூல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தியும் சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான பட்டுசேலை நெசவாளர்கள் புதன்கிழமை 3 -ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் கோவிந்தராஜபுரம், தொட்டம்பாளையம், ரங்கசமுத்திரம், சதுமுகை, நால்ரோடு, பெரியகொடிவேரி, கொண்டையம்பாளயைம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெசவுத்தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக பட்டுநூல் விலை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் பட்டுசேலை உற்பத்தியாளர்கள் பட்டுசேலை உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.
இதனால் அதனைச் சார்ந்துள்ள பட்டுநூல் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இப்பிரச்னையை மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 14-ஆம் தேதி முதல் பட்டுச்சேலை நெசவை நிறுத்தியுள்ளனர். 3-ஆவது நாளாக பட்டுசேலை நெசவுத் தொழிலாளர்கள் சேலை உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.
பட்டுநூல்சேலை தயாரிக்கும் ஆயிரக்கணக்கான தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை நம்பியுள்ள பட்டுசேலை நெசவாளர்கள், பட்டு, பாவு , தார் நூல் சுற்றுவோர், சாயம் போடுபவர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக நெசவுத்தொழிலாளர்கள் போதிய வேலையின்மை காரணமாக பொருளாதார ரீதியாக பிரச்னையைச் சந்தித்துள்ளனர். பட்டுநூல் விலையை உயர்த்தியதால் பட்டுச்சேலை உற்பத்தி செய்யும் உரிமையாளர்கள் அதனை அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது. கட்டுப்படியான விலை கிடைக்காததால் பட்டுச்சேலை உற்பத்தி உரிமையாளர்கள் பட்டுச்சேலை தயாரிப்பை நிறுத்திவிட்டனர். கைத்தறிவு நெசவுகளுக்கு தற்போது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
கைத்தறி பட்டு நெசவுக்கு மூலப்பொருளான பட்டுநூல் விலை 6 மாதத்தில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்து நெசவாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நெசவாளர்கள் வேலைநிறுத்ததால் 3-ஆவது நாளாக நெசவுத்தொழில் முடங்கியுள்ளது.