மக்கள் நலனுக்கு சமரசமின்றி பணியாற்றவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேசினார்.
ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலை அருகே கருப்பண வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில், மக்கள் நலனுக்கானப் பணியை எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் தொய்வின்றி நடத்துவதுதான் எங்கள் அரசியல். கம்யூனிசம் அழிந்து வருகிறது என்ற பலரின் கூற்று பொய்யாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.
நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் பேசியதாவது:
எந்தத் திட்டமாக இருந்தாலும் அது மக்களின் வளர்ச்சிக்காக கொண்டு வந்தால் அது ஏற்கப்படும். முல்லைப் பெரியாறு அணை திட்டத்தை பென்னி குயிக் கொண்டு வந்தபோது, மக்களே மனம் உவந்து அத்திட்டத்துக்குத் தேவையான உதவிகளை செய்தனர். போபாலில் ஒரு ஆலையில் வெளிப்பட்ட நச்சு வாயுவால் பல நூறு பேர் இறந்தனர். இன்று வரை பல குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். அதுபோன்ற திட்டங்களை கொண்டு வரவும், உருவாக்கவும், அரசு ஒரு போதும் துணை போகக்கூடாது என்றார்.
கட்சியின் மூத்த தலைவர்களாக உள்ள கே.எஸ். நாச்சிமுத்து, டி.கே. செல்லப்பன், கே.எம். ரெத்தினசாமி ஆகியோரை தேசியக்குழு உறுப்பினர் கே. சுப்பராயன் கெளரவித்தார். கட்சியின் இணையதளத்தினை தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தொடங்கிவைத்தார். விழா மலரை மாநிலக்குழு உறுப்பினர் த. ஸ்டாலின் குணசேகரன் வெளியிட, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பா.ப மோகன், தமிழக பசுமை இயக்கத் தலைவர் வெ. ஜீவானந்தம் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநகர செயலாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் திருமலைராஜன், தி.க. மண்டல அமைப்பு செயலாளர் சண்முகம், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி. ரவி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.