பவானி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை, கனிம வளத் துறை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
காவிரி ஆற்றிலிருந்து லாரிகள் மூலம் கள்ளத்தனமாக மணல் கடத்தப்படுவதாக் கிடைத்த தகவலின்பேரில் சேலம் மாவட்ட கனிம வளத் துறை பறக்கும் படை உதவி இயக்குநர் ஜி.குருசாமி தலைமையில், அதிகாரிகள் பவானி - கவுந்தப்பாடி சாலையில் காலிங்கராயன்பாளையத்தில் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில் ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர் கே.நல்லசிவம், கிராம நிர்வாக அலுவலர் அழகர்சாமி, சித்தோடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லாரி ஓட்டுநர் கவுந்தப்பாடி உப்புக்காரப்பள்ளத்தைச் சேர்ந்த பெத்தநாயக்கர் மகன் சின்ராஜ் (40) என்பதும், லாரி உரிமையாளர் ஆலத்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பதும் தெரியவந்தது.
விசாரணையில், உரிய ஆவணங்கள் எதுவுமின்றி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்தோடு, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிக்கு அபராதம் விதிக்க ஈரோடு வருவாய் கோட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தனர்.