மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பழச் செடிகளை மானிய விலையில் விவசாயிகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தின்கீழ் செயல்படுத்தப்படும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வழியாக செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் மூலம் மானாவாரி பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரிய வாய்ப்பாகும்.
நடப்பு ஆண்டில் (2018-19) ரூ. 21.24 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிலத்துக்கு ஏற்றாற்போல் குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து இரட்டிப்பு லாபம் பெற வழிவகை செய்யப்படும்.
நடப்பு ஆண்டு தோட்டக் கலை சார்ந்த பண்ணையத்தின் கீழ் விவசாயிகள் மரவள்ளி பயிருடன் ஊடுபயிர், கலப்புப் பயிர், பல அடுக்கு பயிர் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.
மேலும், இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்க மண்புழு உரக் கூடம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும். மேலும், விவசாய உற்பத்தித் திறனை உயர்த்தும் நவீன தொழில்நுட்பங்களின் பலன்கள், செயல்பாடுகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.
கூடுதல் விவரங்களை அறிய ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோட்டக் கலை துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியும், உழவன் செயலி மூலமாகவும் 0424-2339497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.