சத்தியமங்கலம் நகராட்சியினர் போலீஸ் பாதுகாப்புடன் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் ரூ. 55 கோடி செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையம், வடக்குப்பேட்டை,பெரியகுளம் ஆகிய பகுதியில் உள்ள 23 வார்டுகளில் சாக்கடை அமைக்கும் பணி நிறைவுறும் நிலையில் உள்ளது.
பல்வேறு இடங்களில்இருந்து வரும் சாக்கடை நீர் ஒன்றாகக் கலந்து 21-ஆவது வார்டில் உள்ள வேட்டுவர் தெருவுக்கு வந்து சேருகிறது. அங்கு, பெரிய தொட்டி அமைத்து சாக்கடை நீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுத்திரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என முன்னாள் கவுன்சிலர் லட்சுமணன் தலைமையில், வேட்டுவர் தெரு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து சாக்கடை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே மாவட்ட நிர்வாகத்திடம் நகராட்சி முறையாக அனுமதி பெற்று வேட்டுவர் நகரில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்கியது. இதற்கு அப்பகுதி மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்களை எச்சரிக்கை செய்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்துக்கான குழி தோண்டும் பணி நடைபெற்றது.