வீட்டுமனைப் பட்டா கேட்டு, தொப்பம்பாளையம் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலத்தை அடுத்த தொப்பம்பாளையம், வெள்ளாளபாளையம், சின்னக்கரடுமேடு, பாரதி நகர், சிக்கரசம்பாளையம் ஆகிய பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொந்த வீடின்றி கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். இவர்கள் பலமுறை வீட்டுமனைப் பட்டா கேட்டும் வழங்காததால் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுகுறித்து, பகுஜன் சமாஜ்வாதி கட்சி செயலாளர் கோபாலசாமி கூறியதாவது:
இப்பகுதி மக்கள் அரசுக்கு நில வரி, வீட்டு வரி முறையாகச் செலுத்தி வருகின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் அவரவர் குடியிருக்கும் இடத்தில் பட்டா வழங்குமாறு பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரையிலும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.