ஈரோட்டில் ஆய்வக உதவியாளர் உள்பட பல்வேறு அரசுப் பணிகள் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 34.80 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்த விஜயராகவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமாரிடம் அளித்த மனு விவரம்:
எனக்கு பள்ளிக்கல்வித் துறையில் ஆய்வக உதவியாளர் பணி வாங்கித்தருவதாகக் கூறி இருவர் பணம் பெற்றுச் சென்றனர். மேலும், என்னைப் போலவே கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணி உள்பட பல்வேறு அரசுப் பணிகள் பெற்றுத் தருவதாகவும் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாரிடம் 13 பேர் புகார் தெரிவித்திருந்தனர். விசாரணையில், பவானி வட்டம், ஒரிச்சேரியைச் சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (32), கோபி அருள் நகரைச் சேர்ந்த தியாகராஜன் மகன் மனோஜ்குமார் (46) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள், மொத்தம் ரூ. 34.80 லட்சம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.