மாநில அளவிலான கையுந்து பந்துப் போட்டி மற்றும் உலகத் த்திறனாய்வுப் போட்டியில் குமுதா பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநில கையுந்து பந்துக் கழகம் சார்பில் மாநில அளவிலான மினி கையுந்து பந்துப் போட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. இந்தப் போட்டியில், ஈரோடு அணியில் கோபி அருகேயுள்ள நம்பியூர், குமுதா பள்ளி மாணவிகள் ஷாலினி, நிஷா, ராஜஸ்ரீ ஆகிய மூன்று பேர் பங்கேற்று விளையாடினர்.
இந்த அணி மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
உலகத் திறனாய்வுப் போட்டி:
மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வுப் போட்டி கோபி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், குமுதா பள்ளி மாணவர் ஜி.மெய்கவியரசு 400 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்கை வென்றார்.
மாணவி எம்.ஸ்வேதா 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 3-ஆவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார். மாணவர் ஜி.மெய்கவியரசு மண்டல அளவிலான போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலர் டாக்டர் மாலினி, பள்ளி முதல்வர் மஞ்சுளா, பள்ளித் தலைமையாசிரியை வசந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.