ஈரோடு மாவட்டத்தில் நிகழாண்டில் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 90 ஆயிரம் பேருக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி, அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி கடந்த கல்வி ஆண்டில் (2017-18) அரசுப் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் 22. 66 லட்சம் பேருக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இதேபோல் தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 3.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகையுடன் கூடிய பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இதற்காக ஆகும் செலவுகளை ஈடுசெய்ய கடந்த (2017-18) ஆண்டில் ரூ. 540 கோடி அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில், நிகழ் கல்வி ஆண்டில்(2018-19) ஜூன் 1இல் பள்ளிகள் திறக்கப்படும் எனஅரசு அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, நலப் பள்ளிகள் உள்பட 243 பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 86, 360 மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் இலவசப் பேருந்து பயண அட்டைவழங்கப்பட்டுள்ளதாகவும், நிகழாண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.