ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் வனப் பகுதியில் வண்ணபூரணி சுற்றுலா திட்டத்தில் இதுவரை 4,713 பேர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அடர்ந்த வனப் பகுதியை உள்ளடக்கியுள்ளது. இதில், சத்தி, பவானிசாகர், டி.என்.பாளையம், கேர்மாளம், தலமலை, ஆசனூர் வனச் சரகங்கள் உள்ளன. இந்த 7 வனச் சரகங்களில் சிறுத்தை, புலி, காட்டெருமை, கழுதைப் புலி, மான், யானை என வன விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
2013 ஆம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. வனப் பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை கண்காட்சிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், வனப் பகுதியைச் சுற்றிப் பார்க்கும் ஆவல் வனப் பிரியர்களிடம் ஏற்பட்டது. இதற்காக வண்ணபூரணி சுற்றுலாத் திட்டத்தை வனத் துறையினர் அறிமுகப்படுத்தினர்.
சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் புலிகள் காப்பகத்தைச் சுற்றிப் பார்க்கலாம். அதற்கென பிரத்யேக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானகம் மூலம் வனத்துக்குள்ளேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். அப்போது, வனப் பகுதிக்குள் சுதந்திரமாக சுற்றும் ஏராளமான வன விலங்குகளை நேரில் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பல்வேறு அனுபவங்களைத் தரும் இந்தச் சுற்றுலாவுக்கு ரூ. 600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வனச் சுற்றுலா செல்ல விரும்புவர்கள், சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து சுற்றுலா சென்று வருகின்றனர். தற்போது கோடை விடுமுறைக்கு பலரும் வனப் பகுதியில் சுற்றுலா சென்று வந்தனர். இதுவரை 4,713 பேர் சுற்றுலா சென்று வந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.