சென்னிமலை பகுதியில் முறையாக செயல்படாத 2 சாய ஆலைகளை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சென்னிமலை பகுதியில் 25 க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் உள்ளன. இவை முறையாக செயல்பட்டு வருகிறதா என வாரம் ஒருமுறை மாசுக் கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணகுமார் தலைமையில் உள்ள அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, சீசன் குறைந்துள்ளதால் 15 சாய ஆலைகள் மட்டுமே இயங்கி
வருகின்றன.
இந்நிலையில், சாய ஆலைகளுக்கு சனிக்கிழமை நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், தேவராஜ், சுந்தரமூர்த்தி ஆகியோருக்குச் சொந்தமான 2 சாய ஆலைகள் முறையாக செயல்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணகுமார் மின் இணைப்பைத் துண்டிக்கவும், சாய ஆலைகளை மூடவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, உதவிப் பொறியாளர் மோகனவள்ளி உடனிருந்தார்.