அறச்சலூரில் கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
அறச்சலூரில் உள்ள நாகமலை காப்புக் காட்டில் மான், உடும்பு, மயில், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்த மலை கிழக்கு தலவுமலையில் இருந்து மேற்கு தலவுமலை வரை உள்ளது. மலையின் இருபுறமும் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளதால் பல்வேறு வன விலங்குகள் அடிக்கடி விவசாயத் தோட்டங்களில் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் கைகாட்டி பகுதியில் உள்ள கிணற்றில் புள்ளிமான் விழுந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மானை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த மானை அறச்சலூர் வன விரிவாக்க அலுவலக வேட்டை தடுப்புக் காவலர் வினோத்குமாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத் துறையினர் மானுக்கு சிகிச்சைஅளித்து மீண்டும் வனத்துக்குள் விட்டனர்.