சிவகிரி அருகே வள்ளிபுரத்தில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 2 கோடியே 82 லட்சம் செலவில் புதிய துணை மின் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
விழாவுக்கு, மொடக்குறிச்சி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சிவசுப்ரமணி தலைமை வகித்தார். மின் வாரிய இயக்குநர் மின் பகிர்மானம், விநியோகம் ஹெலன், ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன், ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மக்களவை உறுப்பினர் செல்வகுமார சின்னையன், புதிய துணை மின் நிலையத்தைத் திறந்துவைத்தார். துணை மின் நிலைய நிலத்தை இலவசமாக வழங்கிய வள்ளிபுரம் பெரியசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய துணை மின் நிலையம் மூலம் வ.கருக்கம்பாளையம், பொரசமேட்டுப்புதூர், பொங்காளிவலசு, குறுக்கு வலசு, விநாயகன் புதூர், தட்டாம்பாளையம், முத்தையன் வலசு, கொந்தளம் புதூர், கோட்டைகாட்டு வலசு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பயன்பெறுவார்கள்.