கோவையில் செயல்பட்டு வரும் ஆர்த்தோ ஒன் மருத்துவமனையின் புதிய கிளை குன்னூர், கிரேஸில் பகுதியில் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. இம்மருத்துவமனையை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு திறந்து வைத்தார்.
இதில், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் டேவிட் பி.ராஜன் பேசியதாவது: நீலகிரி போன்ற மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பச்சவாதம், ரத்தவாதம், மூட்டுத் தேய்மானம், கழுத்து, இடுப்பு, முதுகுத்தண்டுப் பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
நோயில் அவதிப்படுவதுடன், மலைப் பகுதி மக்கள் சிகிச்சைக்காக கோவை போன்ற பகுதிகளுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய சூழல் இருந்தது.
இந்நிலையில், மலைப் பகுதி மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில், முதன் முறையாக குன்னூர், கிரேஸில் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆர்த்தோ ஒன் கிளினிக் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ஜேம்ஸ் ஞானதாஸ், கே.சந்தோஷ் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.