நீலகிரியில் உள்ள கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளில பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, தினக் கூலியாக ரூ. 286 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தினக் கூலியில் ரூ. 5 குறைத்து, ரூ.281 மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர்கள், தினக் கூலியை ரூ. 350-க்கும் அதிகமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குன்னூர், கூடலூர், மஞ்சூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெட்போர்டு பகுதியில் உள்ள கூட்டுறவுத் தேயிலை உற்பத்தி தலைமை அலுவலகமான இன்ட்கோ அலுவலக வாயில் முன்பாக உண்ணாவிரதம் இருப்பதற்காகத் திரண்டனர். இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து, தொழிலாளர்கள், அலுவலக வாயில் முன்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிற்பகலில், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், அதிகாரிகள் இடையே
இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக வரும் 10-ஆம் தேதி வரை நிர்வாகத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால், இதை ஏற்கமறுத்து, அதுவரை பணிக்குச் செல்வதில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது.
தற்போது நடைபெற்ற 2-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், வரும் 10-ஆம் தேதி வரை கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகள் ஏற்கெனவே, விவசாயிகளுக்கு ரூ. 25 கோடி வரை நிலுவையில் வைத்துள்ள நிலையில், உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் கூட்டுறவுத் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு
பசுந் தேயிலையை வழங்கும் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.