குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோண்மென்ட் போர்டு உறுப்பினர்கள் மீது பொது மக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என கன்டோண்மென்ட தலைமை நிர்வாக அதிகாரி ஹாரிஷ் வர்மா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
அண்மைக் காலமாக வெலிங்டன் கன்டோண்மென்ட் பொது மக்கள் தரப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீது தலைமை நிர்வாக அதிகாரிக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு நிர்வாகம் மூலமாக பொது அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டும் பொது அறிவிப்பு நோட்டீ வழங்கப்பட்டிருந்தது. எந்த நபரையாவது வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்ற ஆட்சேபணை இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்க அறிவித்திருந்தோம். இந்தத் தகவலுடன், கன்டோண்மென்ட் சட்டத்தை மீறி போர்டு உறுப்பினர்கள செயல்படுவதாகப் பொது மக்கள் தரப்பில் இருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அந்தப் புகார்களை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்துள்ளோம். அவரது ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர், புகார் கூறப்பட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் இலவசப் பள்ளி வாகனங்களின் இயக்கத்தை நிறுத்திவிட்டோம். ஆனால், வாகன ஒப்பந்ததாரர்கள் முன்வந்து கடந்த சில நாள்களாக வாகனங்களை இயக்கினர். அவர்கள் தற்போது, புதன்கிழமை முதல் பள்ளி வாகனங்களை இயக்குவதை நிறுத்தி விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி போர்டு கூட்டத்தில் கன்டோண்மென்ட் பகுதிக்கு உள்பட்ட 7 வார்டுகளிலும் உள்ள குழந்தைகளுக்கு ரூ. 400 என்றும் மற்ற பகுதிகளிலிருந்து வருபவர்களுக்கு ரூ. 1,200 என்றும் வாகனக் கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு ஆண்டுக்கு இந்தக் கட்டடணத்தை மட்டும் வசூலித்துவிட்டு, வரும் ஆண்டுகளில் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். தற்போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பேருந்து பயண அட்டை வழங்கியுள்ளோம். அதை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி பயன் பெற்று வருகிறார்கள் என்றார்.