மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையைக் கண்டித்து வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மாலை கண்டனப் பேரணி நடத்தினர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவத்துக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ராணுவம் சம்பந்தமாக தளவாட உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருப்பதால் அவை மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன. அகில இந்திய அளவில் 41 தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன.
இதில், 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாதுகாப்புத் தளவாட தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டித்து அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜூன் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 -ஆம் தேதிவரை புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மற்றும் திருச்சியில் உள்ள தொழிற்சாலை ஆகியவற்றைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள வெடி மருந்து தொழிற்சாலையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நுழைவாயிலில் தொடங்கி காந்தி கேட் வரை பேரணி நடைபெற்றது.
இப்பேரணிக்கு சிஎஃப்எல்யூ தொழிற்சங்கத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிலிப், இணை செயலர்கள் ரவி, ஐஎன்டியூசி தொழிற்சங்க செயலர் திலீப்குமார், செயல் தலைவர் ஜோஷி லாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பரணியில் சிஎஃப்எல்யூ தொழிற்சங்க அலுவலகச் செயலர் ரவி, அமைப்புச் செயலர் அனுராஜன், பணிக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.