கூடலூரை அடுத்த பந்தலூரில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 114 பேருக்கு ரூ. 38 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பந்தலூரில் நடைபெற்ற இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கட்ந்த 6 ஆண்டுகளில் 1,225 பேருக்கு ரூ. 38 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1, 7191 பேருக்கு 1 கோடியே 71 லட்சம் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத் துறை சார்பில் 3,788 பேருக்கு ரூ. 1.1 கோடியும், 11 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
நெல்லியாளம் நகராட்சி சார்பில் ரூ. 85 லட்சம் மதிப்பில் 30 வளர்ச்சிப் பணிகளும், பல்வேறு பகுதிகளில் ரூ. 2 கோடியே 37 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களுக்கு ரூ. 49 லட்சம் மதிப்பில் 18 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரியம் மூலம் 3,485 வீடுகள் கட்டித்தரப்படவுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 14 பேருக்கு ரூ.14.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் 114 பேருக்கு ரூ. 38. 8 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் தேவகுமாரி, சுகாதாரத் துறை உதவி இயக்குநர் புகழேந்தி, தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநர் சிபிலா மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.