சீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் உதகையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகையில், இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் நிர்மலா தலைமையில் ஆட்சியர் அலுவலகம் எதிரேஇந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் கணபதி ரவி, மாவட்டத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து நிர்மலா தெரிவித்ததாவது:
இந்தியாவில் சீனப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும். பொதுமக்களும் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும். பொதுமக்கள் மத்தியில் சுதேசி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கட்சியின் மாநில அமைப்புச் செயலர் கணபதி ரவி கூறுகையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்தையே அழிப்பதோடு, போட்டியாளர்களிடத்தில் தற்கொலை எண்ணத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளதால் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நீலகிரி மாவட்டத்துக்குள் இனிமேல் நடிகர் கமல்ஹாசனை நுழையவிட மாட்டோம் என்றார்.