மஞ்சூர் அருகே மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிங்கவால் குரங்கை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்த சிங்கவால் குரங்கு, டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் குழந்தை உள்பட 3 பேரை கடித்துள்ளது. அப்பகுதியில் சுற்றித்திரியும் இந்தக் குரங்கைப் பிடிக்க வனத் துறையினர், தரை மட்டத்திலும், மரத்தில் பரண் அமைத்தும் தானியங்கிக் கூண்டுகள் வைத்துள்ளனர். ஆனால், கூண்டில் சிக்காத சிங்கவால் குரங்கு அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு புகுந்து, சிறுவனைக் கடித்தது. சிங்கவால் குரங்கை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் குந்தா வனச் சரகர் ராமசந்திரன், வனவர் சசிதரன், வனக் காப்பாளர் சிவகுமார் அடங்கிய வனக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டும் பலனளிக்க வில்லை.
இந்நிலையில், முதுமலை வனமருத்துவர் விஜயராகவன் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி சிங்கவால்
குரங்கைப்பிடிக்கும் முயற்சியில் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர்.